தனுஜா ஜெயக்குமார். இவர் ஒரு ஈழத்து அகதி சிறுமி. தன் தாய் தந்தையருடன் தமிழ்நாட்டில் திருச்சியில் வாழ்ந்து வருகின்றார்.
தனுஜா ஜெயக்குமார் ஒரு சிறந்த நீச்சல் வீராங்கனை. அண்மையில் பூனேவில் நடந்த அகில இந்திய நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.
இதையடுத்து அவர் அக்டோபர் 21ம் திகதி அமெரிக்காவில் நடக்கவிருக்கும் உலகப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.அதில் பங்குபற்றினால் நிச்சயம் தனுஜா ஜெயக்குமார் பதக்கம் பெற்று தமிழ் இனத்திற்கு பெருமை சேர்ப்பார் என்பது திண்ணம்.
ஆனால் இப்போது பிரச்சனை என்னவென்றால் இவர் அமெரிக்கா செல்வதற்கான இந்திய அரசின் அனுமதியும் கடவுச் சீட்டும் பெற முடியாமல் உள்ளது. இவர் இந்தியாவில் அகதியாக இருப்பதால் உரிய கடவுச்சீட்டை வழங்க இலங்கை அரசாங்கம் மறுத்து வருகின்றது.
இதேவேளை இவர் ஈழத்து அகதி என்பதால் இந்திய அரசாங்கமும் கடவுச்சீட்டு வழங்க மறுக்கிறது.
இதுவே அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளாக இருந்தால் உடனடியாக குடியுரிமை வழங்கி தமது நாட்டுக்கு பதக்கம் பெறுவார்கள். ஆனால் இந்த சிறுமி ஈழதமிழ் அகதியாக இருப்பதால் இலங்கை அரசும் அக்கறை காட்ட மறுக்கிறது. ஈழத்தமிழருக்கு நாம் இருக்கின்றோம், அவர்கள் எம் தொப்புள் கொடி உறவுகள் என மேடைகளில் முழங்கும் தமிழ்நாட்டு அரசாங்கமும் கூட அக்கறைகாட்ட மறுக்கிறது.
அத்துடன் தனுஜா குடும்பத்தினருக்கு அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளவோ அல்லது வழக்கு போட்டு நீதி பெறவோ எந்த வசதிகளும் இல்லை . யாராவது மனிதாபிமானம் உள்ளவர்கள் இரக்கப்பட்டு உதவி செய்தால் மட்டுமே அந்த சிறுமியின் கனவுகளும் நம் ஈழத்திற்கும் பெருமை கிடைக்கும்.
இல்லையேல் ஈழத்து சிறுமியின் கனவு அகதி என்பதற்காக கருகி விடும் நிலையே இருக்கிறது.
மேடைக்கு மேடை முழங்கும் தமிழ்நாட்டில் உணர்வுள்ள தமிழர்கள் யாராவது இச் சிறுமிக்கு இரக்கம் காட்டுவார்களா? அல்லது அவளின் வெற்றிக்கு தடைபோடுவார்களா?
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!